Ekambaranathar: தொடங்கியது ஏகாம்பரநாதர் பிரம்மோற்சவ விழா!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ திருவிழா இன்று தொடங்கியது.
தமிழ்நாடு கோயில்கள் அமைந்துள்ள மிகப்பெரிய சுற்றுலாத் தலமாகும். அதில் காலத்தைக் கடந்து வாழும் கோயில்கள் ஏராளமானவை உள்ளன. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயில் மிகவும் பழமை வாய்ந்த கோவிலாகும்.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். இது மண் தலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த புகழ்பெற்ற சிறப்பு வாய்ந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரத் திருவிழா மிகவும் விமர்சையாக நடைபெறும்.
இந்நிலையில் இன்று பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 5.30 மணி அளவில் சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்கக் கொடி ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர்.
இந்த பங்குனி உத்திர பிரம்மோற்சவ திருவிழா தொடர்ந்து 14 நாட்கள் விமர்சையாக நடைபெற உள்ளது. காலை மாலை எனத் தினமும் இரண்டு வேளைகளும் பல்வேறு வாகனங்களில் ஏகாம்பரநாதரும், ஏலவார்குழலி அம்மையும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.
இறைவனும், இறைவியும் காஞ்சிபுரத்தில் உள்ள முக்கிய வீதிகளில் வளம் வந்து பக்தர்களுக்கு தங்களது அருள் ஆசியை வழங்குவார்கள்.
இந்த பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான ராவண அவதாரம் உற்சவம் வரும் மார்ச் 30ம் தேதி அன்று நடக்க உள்ளது. அதேபோல் மார்ச் 31ஆம் தேதி அன்று 63 நாயன்மார்கள் வீதி உலா நடைபெறும். அதே தினத்தன்று மாலை வெள்ளித்தேர் உற்சவமும் நடைபெறும்.
ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி அன்று காலை நேரத்தில் திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறும். இந்த பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழாவைக் காண்பதற்காகத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
சுவாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் மேலும் தொடர்ந்து வர வாய்ப்பு இருக்கின்ற காரணத்தினால், விழாவுக்கான ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் விரைவாகச் செய்து வருகின்றனர்.
டாபிக்ஸ்