குளத்தில் கிடைத்த ஆதினமிளகி அய்யனார்!
300 ஆண்டுகள் பழமையான கீழக்கோட்டை ஆதினமிளகி அய்யனார் கோயில் குறித்து இங்கே காணலாம்.
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அடுத்துள்ள கீழக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ளது ஆதினமிளகி அய்யனார் கோயில். இது 300 ஆண்டுகளுக்கு முன்பு ஊர் எல்லையில் உள்ள வனப்பகுதியில் சிறிய மண்சிலைகளைக் கொண்ட கோயிலாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
அப்போது கோயிலின் அருகிலிருந்த குளத்தைச் சுத்தம் செய்த போது சிலை போன்று கிடைத்ததாகவும், அந்த சிலையைக் கோயிலில் வைத்து அப்பகுதி மக்கள் வழிபாடு நடத்தியதால் அந்த கிராமமே செழித்ததாகவும் தல வரலாறு கூறுகிறது.
இந்த கோயில் கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. நுழைவாயிலின் இரண்டு பக்கமும் குதிரையில் வீற்றிருக்கும் அய்யனாரின் சிலைகள் பிரம்மாண்டமாகக் காணப்படுகிறது. வாயிலின் இடதுபுறத்தில் பெரியாள் ஆச்சி அம்மன் சன்னதியும், உள்ளே நுழைந்தவுடன் கொடி மரமும் உள்ளன.
நுழைவாயிலுக்கு நேர் எதிராகப் பிரதான சன்னதியில் ஆதினமிளகி அய்யனார் காட்சி தருகிறார். இடதுபுற வாயில் அருகே முன்னோடி சன்னதியும் பைரவர் சன்னதியும் அமைத்துள்ளன. கோயிலின் தெற்கு பகுதியில் சின்ன கருப்பர், பெரியகருப்பர், காளியம்மன், சப்த கன்னிகள் மற்றும் சன்னதிகள் அமைந்துள்ளன.
பிரதான சன்னதியில் ஒட்டி கன்னிமூலை கணபதியும், வடமேற்கில் வள்ளி தெய்வானையுடன் முருகனும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். கோயிலின் பின்புற வாயிலுக்கு எதிரில் குளம் அமைந்துள்ளது.
இந்த குளத்தில் உள்ள தவளைகள் அனைத்தும் பச்சை நிறத்தில் மட்டுமே உள்ளன. இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறினால் மண் சிலைகளைச் செய்து வைத்து வழிபாடு நடத்துகின்றனர்.