ஐபிஎல் 2025: ரோஹித், சூர்யா அதிரடி.. பழிதீர்த்த மும்பை! இரண்டு சீசன்களுக்கு பிறகு சிஎஸ்கேவுக்கு எதிராக வெற்றி
Updated Apr 20, 2025 11:18 PM IST

பேட்டிங்கில் ஜொலிக்காமல் இருந்த ரோஹித் ஷர்மா, சிஎஸ்கேவுக்கு எதிராக பார்முக்கு திரும்பியுள்ளார். ரோஹித், சூர்யாகுமார் ஜோடி இணைந்து அதிரடியை வெளிப்படுத்த, இரண்டு சீசன்களுக்கு பிறகு சிஎஸ்கேவுக்கு எதிராக மும்பை வெற்றி பெற்றுள்ளது. இந்த சீசனில் முதல் போட்டியில் பெற்ற தோல்விக்கும் பழிதீர்த்துள்ளது
ஐபிஎல் 2025 தொடரின் 38வது போட்டி மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி தொடங்கும் முன் மும்பை இந்தியன்ஸ் 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 7 போட்டிகளில் 2 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலும் இருந்தது.
இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே சேப்பாக்கத்தில் நடந்த முதல் மோதலில் சிஎஸ்கே வெற்றி பெற்றது. இதனால் மும்பை இந்தியன்ஸ் பழிதீர்க்க காத்திருக்கும் போட்டியாக அமைந்திருந்தது.
சிஎஸ்கே அணியில் ராகுல் திரிபாதிக்கு பதிலாக 17 வயதான இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே சேர்க்கப்பட்டிருந்தார். இது அவரது அறிமுக போட்டியாகும் மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) 176 ரன்கள் எடுத்த நிலையில், இந்த ஸ்கோரை சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக கடந்த 2022 சீசனில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ். இதைத்தொடர்ந்து இரண்டு சீசன்கள் கழித்து தற்போது சிஎஸ்கேவுக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் சேஸிங்
முன்னதாக, டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த சிஎஸ்கே 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. இந்த ஸ்கோரை சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸ் 15.4 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து 26 பந்துகள் எஞ்சியிருக்க, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 76, சூர்யகுமார் யாதவ் 68 ரன்கள் அடித்தனர். சிஎஸ்கே பவுலர்களில் ரவீந்திர ஜடேஜா மட்டும் ஒரு விக்கெட் எடுத்தார்.
நல்ல தொடக்கம்
மும்பை இந்தியன்ஸ் ஓபனர்கள் ரயான் ரிக்கெல்டன் - ரோஹித் ஷர்மா ஆகியோர் அதிரடியான தொடக்கத்தை தந்தனர். இருவரும் இணைந்து சிஎஸ்கே பவுலர்களுக்கு எதிராக பவுண்டரி, சிக்ஸர்களாக அடித்து விளாசினார். பவர்ப்ளே முடிவில் மும்பை இந்தியன்ஸ் விக்கெட் இழப்பின்றி 62 ரன்கள் எடுத்தது. 19 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த ரிக்கெல்டன் பவர்ப்ளே முடிந்த அடுத்த ஓவரிலேயே அவுட்டாகி வெளியேறினார்.
ரோஹித் - சூர்யகுமார் அதிரடி
இதன் பின்னர் ஜோடி சேர்ந்த ரோஹித் - சூர்யகுமார் கூட்டணி கொஞ்சமும் அசாராமல் சிஎஸ்கே பவுலர்களுக்கு எதிராக தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மைதானத்தின் நாலாபுறமும் பவுண்டரி, சிக்ஸர்களாக பறக்கவிட்டனர். சிஎஸ்கேவுக்கு எதிரான இந்த போட்டிக்கு முன்பு வரை பேட்டிங்கில் பெரிதாக ஜொலிக்காமல் இருந்து வந்த ரோஹித் ஷர்மா சிறப்பாக பேட் செய்து 33 பந்துகளில் இந்த சீசனின் முதல் அரைசதமடித்தார்.
மறுமுனையில் சூர்யகுமார் யாதவும் அதிரடியில் மிரட்டிய நிலையில் 26 பந்துகளில் அரைசதமடித்தார். இருவரும் சிஎஸ்கேவுக்கு எதிராக முழுமையான ஆதிக்கத்தை வெளிப்படுத்தியதோடு, எந்தவொரு வாய்ப்பும் அளிக்காமல் விளையாடினர்.
இதனால் நல்ல ரன்ரேட்டுடன் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றதோடு, புள்ளிப்பட்டியலிலும் 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சிஎஸ்கே பவுலர்களில் இம்பேக்ட் வீரராக களமிறக்கப்பட்ட அஸ்வின் மட்டும் விக்கெட் எடுக்காதபோதிலும் 4 ஓவர்களில் 25 ரன்கள் என கட்டுப்பாடுடன் பந்து வீசினார்.